புதன், நவம்பர் 26, 2014

ஆரண்ய கண்டம்!!!



பாதுகையை வைத்துப்  பரதன் அரசாண்டான் 
போதுமய்யா அந்தப் பழங்கதைகள் - மாதுகளின் 
லஞ்ச வனவாச லாட்டரியில் கிட்டியதே 
பிஞ்ச செருப்புக்கும் பேறு.

சிவகுமாரன் 

புதன், நவம்பர் 19, 2014

பிள்ளைக் குறள் 40



உழைத்துப் படிப்பாய்! உறுதியாய் தெய்வம்
அழைத்துக் கொடுக்கும் அருள்.

அருளென்று நம்பு! அகந்தை அகற்று!
பொருளைக் குவிக்கின்ற போது.

போதிய மட்டும் பொருள்தேடு! நிம்மதி
ஊதியத்தில் இல்லை உணர்.

உணர்ச்சிப் பெருக்கின் உறுதிகள் யாவும்
கணக்குத் தவறிடும்  காண்.

காண்பவை யாவும் கடவுளின் கைவண்ணம்.
வீண்பெருமை வேண்டாம் விடு.

விடுதலை என்பது வெற்றிக்குப் பின்தான்!
சுடும்வரை தாங்கிடு சூடு!

சூடான சொல்லும் சுயநல புத்தியும்
கேடாய் முடியுமாம் கேள்.

கேள்விகள் வெற்றிக் கதவின் திறவுகோல்!
கேள்விமேல் கேள்வியாய்க் கேள்.

கேளாதே வீணரின் கேலிகள் யாவையும்.
ஆளாகிக் காட்டு(ம்) அவர்க்கு.

அவப்பெயர் பெற்றால் அழித்தல் கடினம்.
தவம்போல் தவறைத் தவிர்.                                     40.
தொடரும்....

சிவகுமாரன் 

ஞாயிறு, நவம்பர் 16, 2014

நன்றி


என்னிதய நன்றிகளை எப்படி நானுரைப்பேன்?
கன்னித் தமிழ்க்கவியைக் காதலித்து- தன்னிதயக் 
கூட்டில் குடிவைத்துக் கொண்டாடும் அன்பருக்கென் 
பாட்டைப் படைத்தேன் பணிந்து.

கன்னல் கவிஞர் களத்தில் பலரிருக்க 
என்னதான் கண்டாரோ என்னிடத்தில் - சின்ன
மடுவை மலையாய் மதித்துப் பரிசை 
நடுவர் அளித்தார் நயந்து.

                                                                                                                       -சிவகுமாரன்

குறிப்பு : ரூபன்& யாழ் பாவாணன்  நடத்திய கவிதைப் போட்டியில் எனது கவிதை இரண்டாம் பரிசு பெற்றுள்ளது.



புதன், நவம்பர் 12, 2014

சேராதோ


வேதம் இதிகாசம் வேண்டுவது எல்லாமே
நாதன் ஒருவனென்ற நாமந்தான் - மோதல்கள்
தீரா மதங்கள் தெளிவுற்று ஒன்றாகச்
சேராதோ நெஞ்சமே சொல்.

சிவகுமாரன்
06.12.1992

திங்கள், நவம்பர் 03, 2014

பிள்ளைக் குறள் 30


இறைவன் கொடுத்தவை எண்ணில் அடங்கா!
நிறைவாய் மனதில் நினை.

நினைத்திடு எப்போதும் நீயாய் பிறரை!
அனைத்திலும் காட்டுவாய் அன்பு.

அன்பால் நெருங்கி அறிவால் கவர்ந்திடு!
உன்புகழ் பேசும் உலகு.

உலகே வியக்க உயர்ந்தாலும் என்றும்
தலைக்கனம் வாரா திரு.

இருப்பாய் நிலவாய்! எதிர்ப்போர்க்குக் கொஞ்சம்
நெருப்பாய் முகங்காட்டி நில்.

நில்லாமல் ஓடிடும் நேரம்! தவறினால்
சொல்லாமல் ஓடும் சுகம்.

சுகத்தின் மகிழ்வும் துயரின் வலியும்
அகத்துள் உளதாம் அறி.

அறிவால் பொருளீட்டி அன்பால் பகிர்ந்து
செறிவாய்ச் செயல்களை செய்
.

செய்த தவறை திரும்பவும் செய்யாதே.
தெய்வமும் மூடும் திரு.

திருவருள் காட்டிடும் தெய்வம்! மனதை
ஒருமுகம் ஆக்கி உழை.  
                                                          30.

தொடரும் ....


சிவகுமாரன்