ஞாயிறு, டிசம்பர் 23, 2012

சொல்லக் கொதிக்குதடா



பள்ளிக்குச் செல்லவே பாதுகாப்பு இல்லையே
உள்ளம் கொதிக்குதடா உண்மையில் - கள்ளமிலா
பிஞ்சை சிதைத்த பெரும்பாவிக் காமுகனின்
குஞ்சை நறுக்கியேக் கொல்.

சிவகுமாரன் 

புதன், நவம்பர் 21, 2012

எழுதாக் கவிதை

அங்குமிங்கும்
அல்லாடிக் கொண்டிருக்கிறது
காற்று வெளியெங்கும்
கவிதை.
ஒரு தென்றலாய்.

மூச்சுவிட நேரமின்றி
ஓடுகிற ஓட்டத்தில்
கைக்கு எட்டாமலும்
கண்ணுக்குத் தெரியாமலும்
கரைந்து போகின்றன
விரிந்த மலரிலிருந்து
வெளிப்படும் மணமாய்
நுகரப்படாமலேயே.

ஒரு தியானம் போல்
உள்ளிழுத்து  நிறுத்தி
காற்றை மூச்சாக்கி
கண்மூடி களிக்கையில்
மெல்ல.. மெல்ல..
எட்டிப் பார்க்கிறது
ஒரு பெரிய நூல்கண்டின்
சிறிய நுனி போல
எழுதப்படாத கவிதையின்
ஒரு வரி.
சிவகுமாரன் 

வியாழன், நவம்பர் 01, 2012

சீட்டுக்கவி


ஈரேழு உலகிலும் இணையேதும் இல்லாத 
  இன்மொழித் தமிழ்க் காதலன். 
  எழுத்துக்கும் செயலுக்கும் இடைவெளி இல்லாது 
  இயங்கிடும் கொள்கை வெறியன் 
தீராத தமிழ்மோகத் தீயினை நெஞ்சுக்குள் 
  தேக்கிவைத் தலையும் கிறுக்கன் 
  தீந்தமிழ் கவியன்றி செல்வங்கள் ஏதையும் 
  சேர்த்துவைக் காத மூடன்
சீராக கவிசொல்லி சிந்தையை மயக்கிடும் 
   சிவகுமாரன் விடுக்கும் ஓலை.
   செந்தமிழ் கவிதைக்கு செவிசாய்த்து மகிழ்ந்திடும்
   செல்வந்த நண்ப காண்க.
பாராட்டுப் பெற்றபல கவிதைகள் பழசாகி 
   பரண் தூங்கும் நிலைமாறவே 
   பலநூறு படிகொண்ட நூலாக்கி பல்லோரும்
   படித்திட வழி செய்கவே. 


                                                                            சிவகுமாரன் 


சனி, அக்டோபர் 27, 2012

தேன் வந்து பாயுது


மாநகராட்சிப் பள்ளியில்
மந்திரியின் பேரன்.

தமிழ்வழிக் கல்வியில்
தானைத்தலைவரின்
தங்க வாரிசுகள்.

அமைச்சருக்கு மாரடைப்பு
அவசர சிகிச்சை
அரசு மருத்துவமனையில் .

பதினான்கு மணி நேர மின்வெட்டு.
" வெக்கை தாங்க முடியல"
வேதனைப்படுகிறார்
மாண்புமிகு முதல்வர்.

ரேசன்கடையில் நெரிசல்.
வரிசையில்  நின்றதால்
மீட்டிங்கு லேட்டு.
அலுத்துக் கொள்கிறார்
ஆளுங்கட்சி  எம்.எல்.ஏ.


கூடங்குளத்தில்வீடுகட்டி
குடியேறினர்
அணு உலை திறக்கச் சொல்லும்
அறிவியல்வாதிகள் .

எல்லோரும் ஓர்நிறை
எல்லோரும் ஓர்விலை
எல்லோரும் இந்நாட்டு மன்னர்.


திங்கள், செப்டம்பர் 24, 2012

சாட்டை



கவிதை எனது 
  கரங்களில் சாட்டை
புவியை புரட்டவந்த 
  போர்வாள் - செவியைக்
கிழிக்கும் கருத்துக் 
  கிடங்கு; பகையை
அழிக்கத் துடிக்கும்
  அணு.
-சிவகுமாரன் 
கனல் பறந்த கல்லூரிப் பருவம்
 1990

வெள்ளி, செப்டம்பர் 21, 2012

இதுவும் ஒரு யாகம்




நாதஸ்வரம்:
அடிவயிற்றின் உள்ளிருந்து கிளம்புகின்ற நாதம்  
  அதையழகாய் இசையாக்கி இதழிரண்டும் ஊதும் 
படியாத மனங்களையும் படியவைக்கும் கீதம் - அது 
  பலபேரை மயங்க வைத்த இசையென்னும் வேதம்.

மேளதாளம்:
மேளமென்றும்  தாளமென்றும் வழங்கும் மிரு தங்கம் 
  மெதுவாகத் தட்ட இசை மேகமேனப் பொங்கும்.
தாளமதை விரும்பாத உயிரில்லை எங்கும் - இத் 
  தாரணியில் இசை என்றும்  அழியாமல் தங்கும்.

நாதம்:
மூச்சடக்கி வாசிக்க மூச்சிரைப்பு வாங்கும் 
  முன்னுதடு கன்னங்கள் முகமெல்லாம் வீங்கும் 
பேச்சு கூட தடைபட்டு உள்மனது ஏங்கும் - ஒரு 
  பாராட்டு வார்த்தையிலே அத்தனையும் நீங்கும்

தாளம்:
பத்துவிரல் அத்தனையும் பலமாக நோகும் 
  பழகிவிட்ட பின்னாலும் வலியெடுக்கும் தேகம் 
இத்தனையும் தாண்டித்தான் தாளம்உரு வாகும்
  இறுமாந்து சொல்லிடுவோம் இதுவும் ஒரு யாகம்.

நாதம்:
காலை கையை அங்குமிங்கும் பலவிதமாய் ஆட்டி 
  கண்டபல கருவிகளை கணக்கின்றி மீட்டி - வரும் 
மேலைநாட்டு சங்கீதமா எங்களுக்கு போட்டி?- நாம் 
  மேதினியில் வாழ்ந்திருப்போம் வெற்றிக் கொடி  நாட்டி.

தாளம்:
நாதம் தாளம் இணைந்தது தான் இசையின் ஆதிமூலம்.
  நாட்டில் இன்று ஒலிப்ப தெல்லாம் இசையின் மரண ஓலம் 
வேதம் போன்ற எம் இசையை வணங்கும் வருங்காலம்- அன்று 
   வேறு இடம் தேடிக்கொண்டு ஓடும் அலங்கோலம். 


-சிவகுமாரன் 
ஏப்ரல் 1993 
வாசுகி இதழ் போட்டிக்காக எழுதியது.

இதே போட்டிக்காக எனது சித்தப்பா சுந்தர பாரதி எழுதிப் பரிசு  பெற்ற கவிதை.
சிந்தையை  மயக்குதடி 
அவள்:

சித்திரைத் திருவிழாவாம் தென்மதுரைக் கோயிலிலே  
   சேர்ந்து நம்ம கச்சேரிக்கு மச்சானே - நானும் 
மொத்தமாக ரேட்டு பேசி முழுத் தொகையும் வாங்கிப்புட்டேன்
   முன்னதாகப் போயிடனும் மச்சானே 
அவன்:

கரும்பு தின்னக் கூலி கேட்டு  கச்சிபேசித் திரிவதுண்டோ 
   கண்டிப்பாக வந்திடுவேன் கண்ணம்மா - நீ
தருமிசைக்கு உளமயங்கித் தாளத்தோடு நானியங்கித் 
   தவிலெடுத்து  முழக்கிடுவேன்  கண்ணம்மா.

அவள்:

நாதசுரக் கானத்திலே நானிசைக்கும் கீதத்திலே 
   நயமளிக்கும் லயத்துடனே மச்சானே - உன் 
நூதனத் திறமைமிக்க மேள இசை  கேட்டு" நந்தி"
   நூறுதரம் தலையசைப்பார் மச்சானே.

அவன்:

 நாதசுரத் துளைவழியே நங்கையுந்தன் மென்விரல்கள் 
    நர்த்தனங்கள் ஆடுமடி  கண்ணம்மா - அதில் 
சீதளம் நிறைந்த இசை "தோடி" முதல் "பைரவி"கள்      
    சிந்தையை மயக்குதடி கண்ணம்மா 

அவள்:

எத்தனை மிகப்பெரிய வித்துவான்க ளானபோதும் 
   இடையினிலே துண்டெடுத்து மச்சானே - கட்டி 
அத்தனை சபை நடுவே ஆலாபனை  செய்து நின்ற 
    அடிமை ஒழிந்ததின்று மச்சானே 

அவன்:

உண்மையாய்க் கலைவளர்க்கும் நம்மவரைப் போன்றவர்க்கு 
   உயர்வைக் கொடுத்த தெய்வம் கண்ணம்மா -பல 
நன்மைகள் அளித்த மேதை "இராஜரெத்தினம் பிள்ளை"யை 
   நன்றியுடன் கும்பிடணும்  கண்ணம்மா 

                                                                                                                          -சுந்தரபாரதி 





வியாழன், ஆகஸ்ட் 30, 2012

கவிலைகள்



வேலை நிமித்தம்
வீடு மாற்றுகிறேன் 
எப்படிச் சொல்லி அனுப்பவது ,
அமாவாசைக்கு வரும்
அப்பா காக்கைக்கு ?

வியந்த மகளின்
விரல் பட்டதும்
பயந்து சுருங்கிய
தொட்டாற்சுருங்கி
எப்போது விரிக்கும்
இலைகளை மீண்டும் ?

கண்ணாடிப் பெட்டிக்குள்
கடனேயென்று நீந்தும்
கலர் மீன்களின்
கனவிலேனும் வருமா
கடலும் ஆறும்?

கண்டம் தாண்டும் பறவை
களைப்பாற வசதியாய் 
எப்போது வளரும்
ஆழக் கடலில் 
ஆலமரங்கள்?

மனிதரைக் கண்டால்
விரைந்து மறைந்து 
உடலைச் சுருக்கி 
ஒளிந்து பயந்து
பயத்தால் கொன்று 
பயத்தால் செத்து 
படமாடும் பாம்பு 
நடமாடுவது எப்போது 
ஏனைய உயிர் போல் 
இயல்பாய் நட்பாய்?


காயம் கொத்தும் 
காகம் விரட்டாது 
கண்ணீர் வடிக்கும் 
காளையின்  வாழ்வில்,
கால்கள் சுருங்கி 
கைகளாய்  மாறும் 
பரிணாம வளர்ச்சிக்கு 
எத்தனை யுகங்கள் 
இன்னும் ஆகும் ?

கோயில் வாசலில்
பிச்சையெடுக்கும்
நாமம் போட்ட
யானைக்கு
எப்போது கிட்டும்
கனவிலிருக்கும்
காடு ?

"கவலைப்படுதற்கு 
காரணம் ஆயிரம் இருக்க 
வெட்டிப் பயலுக்கு 
வேதனையைப் பாரேன்"


விமர்சனம் செய்யும் 
விவரமற்றோர்க்கு
எப்படிப் புரியும் 
புல்லாகிப் பூடாய் 
புழுவாய் மரமாகி 
பல்விருகமாகி  
பறவையாய் பாம்பாய் 
எல்லாப் பிறப்பும்
பிறந்திளைக்கும்
என் கவலை ?




-சிவகுமாரன் 

ஞாயிறு, ஆகஸ்ட் 26, 2012

மனக் குரல்


ஊக்கம் இல்லா உழைப்பு -  மனதில்
தூக்கிச் சுமக்கும் துயர்..

கரும்பாய் இருந்தால் கசக்குவார் - கடிக்கும்
எறும்பாய் இருப்பாய் இனி.

பணிந்ததும் பயந்து தணிந்ததும் போதும்
துணிந்தால் வாராது  துயர்.

தகுதி மறந்து தன்மானம் இழந்து
சொகுசாய் வாழ்வதா சுகம்?

திரும்பத் தருமோ தீர்ந்த இளமையை
விரும்பிச் செய்யா வேலை?

கொஞ்சமே கிடைத்தாலும் கூனிக் குறுகாமல்
நெஞ்சம் நிமிர்த்தி நில்.

வாடிக் கிடந்தால் வாய்ப்புகள் வாரா.
தேடி அலைந்து திரி

பெற்ற அவமானம், பேச்சுக்கள் எல்லாம்
வெற்றியால் அடித்து விலக்கு .

விதிப்பயன் என்று வீணாய் உழைக்காதே 
மதிப்பில்லா இடத்தில் மாடாய் .

கலகம் செய்யாமல் கழன்றுகொள் எளிதாய்.
உலகம் பெரிதென்று உணர்.


திங்கள், ஜூலை 23, 2012

காதல் வெண்பாக்கள் 34

     

     

          வலை 

தலைகால் புரியாமல் 
  தள்ளாடிக் காதல்
வலையில் விழுந்தேன் 
  வகையாய் - மலைமேல்
விளக்காய் இருந்தயென் 
  வாழ்க்கையில் ஏதும்
இலக்கின்றி போனதடி 
  இன்று.



         


                      நிலை 


இன்றைக்கோ நாளைக்கோ
   என்றைக்கு  தீருமடி
கொன்று புதைக்குமுன்
   கோபங்கள்? - நன்றாய்
வதைக்கின்றாய் என்னைநீ, 
  வாட்டும் பிரிவில்
பதைக்கின்ற என்னிலையைப் 
  பார்த்து.



சனி, ஜூலை 07, 2012

ஆலைக்குரல் 20




அற்பமென பாதுகாப்பை அலட்சியம் செய்தல்
தற்கொலை முயற்சிக்குச் சமம் ,

விழிப்புணர்ச்சி இன்றி வேலை செய்வோர்க்கு 
பழிச்சொல் வநதிடும் பார் .

சுமையென்பார் பாதுகாப்பு , சுகமென்பார் விதிமீறல் 
இமைப்பொழுதில் வருவான் எமன், 

எனக்கென்ன என்று இருந்தால் நிச்சயம் 
உனக்கும் வரும்பார் ஊறு..


தள்ளிப் போட்ட காரியம் - கடலில்
அள்ளிப் போட்ட பொருள்.. 

சிவகுமாரன்

மேலும் குரல் கேட்க இங்கே செல்லவும் 

வெள்ளி, ஜூன் 15, 2012

எக்காலம்?


இல்லறக் கடமைகள் இனிதே முடித்து
நல்லற வாழ்வை நாடுவது எக்காலம்?

இரைதேடிப் பறந்து ஏமாறும் காலம்போய்
இறைதேடி என்னுள் இறங்குவது எக்காலம்?

மாய உலகின் மயக்கம் அறுத்திட்டு
காயக் கடலின் கரைசேர்வ தெக்காலம்?

அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாடும் காலம் போய்
அஞ்செழுத்தை ஓதி அமர்ந்திருப்ப தெக்காலம்?

வட்டிக்கு கடன்வாங்கி வாழ்ந்திருக்கும் காலம்போய்
கொட்டிக் கிடப்பதை கொண்டாடுவ தெக்காலம்?

சோற்றைத் தின்று சோர்ந்திருக்கும் காலம் போய்
காற்றைப் புசிக்கும் கணக்கறிவ தெக்காலம்?

வாடிச் சுழன்று வதைபட்ட காலம் போய்
பாடித் திரிந்து பறந்திருப்ப தெக்காலம்?

போடா போவென்று பூவுலகை புறந்தள்ளி
வாடா மலராக வாழ்ந்திருப்ப தெக்காலம்?

கைதட்டல் சுகத்துக்காய் காத்திருக்கும் காலம்போய்
மெய்விட்டு மெய்தேடி மேய்ந்திருப்ப தெக்காலம்?

வருத்தத்தில் தோய்ந்து வாடிடும் காலம்போய்
இருத்தலில் இல்லாது இருப்பது எக்காலம்?

உள்ளம் திறக்கும் உபாயம் கண்டறிந்து
கள்ளத் தனங்கள் களைந்தெறிவ தெக்காலம்?

வெட்ட வெளியெங்கும் வியாபித்த சிவம்தன்னை
கொட்ட விழித்திருந்து கூத்தாடுவ தெக்காலம்?

தேனில் இனிப்பாகத் தித்தித் திருப்பானை
ஊனில் உள்ளுணர்வில் ருசித்திருப்ப தெக்காலம்?

மலருக்குள் மணமாக மறைந்திருப் பானோடு
கலந்திருந்து இன்பம் காணுவது எக்காலம்?

கோவில் குளமென்று கும்பிட்டு அலையாமல்
ஆவியில் அவனை அமர்த்துவது எக்காலம்?

அவனை அமர்த்தியபின் அங்கிங்கு அலையாமல்
சிவனே நானென்று சிலிர்த்திருப்ப தெக்காலம்?

உண்டு உறங்கி உடல் வளர்க்கும் காலம்போய்
கண்டு தெளிந்து கட்டறுப்ப தெக்காலம்?

எல்லாம் சுமையென்று ஏகாந்தம் தேடி
பொல்லா உலகை புறக்கணிப்ப தெக்காலம்?

கல்லுக்குள் இல்லா கடவுளைத் தேடாமல்
உள்ளுக்குள் தேடி உட்காருவ தெக்காலம்?

பேச்சை நிறுத்தி பேரின்பக் கடலுக்குள்
மூச்சை அடக்கி முக்குளிப்ப தெக்காலம்?

வானை நோக்கி வணங்கும் காலம்போய்
நானே இறையென்று நம்புவது எக்காலம்?

சிவகுமாரன் 

புதன், ஜூன் 06, 2012

கேள்விக்கென்ன பதில்?














வான்எனும் வீதியில் வலம்வரும் மேகம்
  வான்மழை நீராய் வருவது எப்படி?
தேன்மழை நீர்த்துளி தெறித்துப் பறந்து
  திரைகடல் சிப்பியில் வீழ்வது எப்படி?
மீன்வகைச் சிப்பியில் விழுந்த நீர்த்துளி
  மின்னிடும் முத்தாய் மாறுவ தெப்படி?
நானிதன் ரகசியம் அறிந்திட முனைந்து
  நாட்களை மட்டும் நாயெனக் கழித்தேன்.

ஒருதுளி விந்து உள்ளே விழுந்து
  உயிர்தனைப் பெற்று வளர்வது எப்படி?
சிறு உடல் கைகால் முளைத்து வளர்ந்து
  சின்னக் குழந்தை ஆவது எப்படி?
ஒருதாய் வயிற்றில் வளர்ந்த போதும்
  உதிரம் வேறாய் ஆவது எப்படி?
ஒருவரும் பதிலை உரைக்க மறுத்தால்
  அறியாச் சிறுவன் அறிவது எப்படி?

உடலுக் குள்ளே உள்ளது காற்றெனில்
  உயிரெனும் காற்று உறைவது எங்கே?
சடலம் விட்டுச் செல்லும் காற்று
  சாவுக் கடுத்து செல்வது எங்கே?
"நடப்பது என்றும் நம்கையில் இல்லை
  நாடக மேடையில் நாம்வெறும் பொம்மை.
கடவுள் தானிதன் காரணம் என்றால்
  கடவுள் என்பவன் யாரவன் எங்கே?

-சிவகுமாரன்

(1988 ஆம் ஆண்டு கேள்விகளால் வேள்விகள் செய்த விளங்காப் பருவத்தில் விளைந்த கவிதை)

வெள்ளி, மே 18, 2012

காதல் வெண்பாக்கள் 32



அபாயம்

என்னைக் குருடாக்கி ஈர்க்கும் இருவிழிகள்!
மின்னல் தெறித்தாற்போல் முத்துப்பல்!-கன்னத்தில்
தப்பிப் பிழைக்கத் தகையின்றிச் செய்தென்னைக்
குப்புறத் தள்ளும் குழி.








அபயம்

காற்றில் பறக்கும் கருங்கூந்தல்! செங்கரும்புச்
சாற்றாய் இனிக்கும் செவ்விதழ்"கள்" - மாற்றுக்
குறையாத பொன்மேனி கொண்டென்னைத் தாக்கி
சிறையிட்டாள் மெல்லச் சிரித்து.




-சிவகுமாரன்

வெள்ளி, மே 11, 2012

அகம்-புறம் விளம்பரம்

காந்திஜி நேருஜி
நேதாஜி ராஜாஜி
படிச்சாச்சு மறந்தாச்சு
வந்தாச்சு வந்தாச்சு
2G 3G.

காமாராஜர் ஈ.வெ.ரா,
கக்கன் ஜீவா
எல்லோரும் சும்மா
நேர்மைன்னா " ஹமாம்"

கடமையைச் செய்
பலனை எதிர்பாராதே
ஆசை அறுமின்
எழுமின் விழிமின்
அன்பே சிவம்
அச்சம் தவிர்
கேட்டது போதும்
கெட்டது போதும்
கேளுங்க கேளுங்க
கேட்டுக்கிட்டே இருங்க
சூரியன் FM 93.5

பஸ் கட்டணம் உயர்வு
பால்விலை ஏற்றம்
கல்விக் குளறுபடி
கரண்டுக்கு அடிதடி
எல்லாம் "கூல்"
ரேடியோ மிர்ச்சி
செம "ஹாட்" மச்சி.


தன்னம்பிக்கை உழைப்பு
நேர்மை திறமை
எல்லாம் தூக்கி
குப்பையில போடு
ஃபேர் & லவ்லி அள்ளிப் பூசு.
ஆறே வாரத்தில்
சிவப்பாகிக் காட்டு
அத்தனை பேரையும்
ஜெயித்துக் காட்டு.


குடல் கருகுது
குண்டி காயுது
உழைக்கும் தோழர்களே
ஒன்று கூடுங்கள்.
உரிமைப் போராட்டம்
உரக்க அழைக்குது
கல்யாண் ஜூவல்லர்ஸ்.


சத்யம் சிவம் சுந்தரம்.
சர்வம் -மீடியா -விளம்பரம்.

-சிவகுமாரன்

சனி, மே 05, 2012

ஹைக்கூ முத்தங்கள் 55



சில்லென்று வீசும்
சிறுமழைத் தூறல்
இயற்கையின் முத்தம்.









காதுகளை வருடும்
காற்றின் இதழ்கள்
இசையின் முத்தம்.












தெளிவின் கதவை
திறக்கும் சாவி
அறிவின் முத்தம்.










இருட்டு மாட்டை
விரட்டும் சாட்டை
ஒளியின் முத்தம்.









இருப்பின் கதவை
இறுக்கும் பூட்டு.
சாவின் முத்தம்.






-சிவகுமாரன்

நன்றி:
ஈற்றடி கொடுத்து எழுதத் தூண்டிய அப்பாத்துரைக்கு

இன்னும் முத்தங்கள் பெற இங்கே செல்லவும்.

செவ்வாய், மே 01, 2012

ஒரு கவிஞனின் நாட்குறிப்பு 6

              வாமனர்கள்
                வாமனர்கள்
             வாமனர்கள்
       வாமனர்கள்
 வாமனர்கள்






வீரியம் மிக்கதோர் வீரக் கவிதையால்
காரிருளை நாமே களைந்தெறிவோம் - சூரியனை
எட்டிப் பிடிப்போம்! எமக்கந்த வானகமே
தொட்டுவிடும் தூரத்தில் தான்.






நந்தமிழ் தன்னை நசுக்கும் கயவரை
நிந்தனை செய்வோம் நெருப்பாகி - செந்தமிழை
விற்போரின் கூட்டம் வெருண்டோடும் எங்களது
முற்போக்குக் கொள்கையின் முன்.

வானுலகத் தேவனுக்கு வாழ்த்துப்பா பாடாமல்
மானுடத்தைப் பாடவந்த மாகவிகள் - சாணுடம்பு
வாமனர்கள் நாங்கள் வளரத் தொடங்கினால்
மாமலையும் எம்முன் மடு.

                                -சிவகுமாரன்



( 01.05.1998 புதுகை த,மு.எ.ச மாவட்ட மாநாட்டில் பாடப்பெற்ற கவிதை.)

வெள்ளி, ஏப்ரல் 20, 2012

ஞாபகம் வருதே

ஞாபகம் வருதே
ஞாபகம் வருதே

தலைவன் என்றதும்
துரோகமும் செல்வமும்
தொண்டன் என்றதும்
தியாகமும் ஏழ்மையும்

உணர்வு என்றதும்
மரத்தலும் மறத்தலும்
உரிமை என்றதும்
மறுத்தலும் மீறலும்

தோழி என்றதும்
துரத்தலும் சேர்தலும்
தோழர் என்றதும்
சேர்தலும் துரத்தலும்

ஈழம் என்றதும்
இனமும் பிணமும்
ஈரம் என்றதும்
மனமும் பணமும்

குழப்பம் என்றதும்
போயஸ்கார்டனும்
குடும்பம் என்றதும்
கோபாலபுரமும்.

தேர்தல் என்றதும்
வாக்கும் நாக்கும்
ஆட்சி என்றதும்
கொள்கையும், கொள்-கையும்.

அரசியல் என்றதும்
தஞ்சமும் லஞ்சமும்
அனுபவம் என்றதும்
ஆடலும் அடங்கலும்.

ஞாபகம் வருதே
ஞாபகம் வருதே

திங்கள், ஏப்ரல் 09, 2012

காதல் வெண்பாக்கள் 30

    இரண்டிலொன்று


மொட்டமாடி மீது
முழித்துக் கிடக்கின்றேன்.
விட்டத்தை நோக்கி
வெறிக்கின்றேன் -கட்டழகில்
கட்டுண்டு நான்கிடந்து
காலம் கழிக்கின்றேன்
வெட்டொன்று துண்டிரண்டு
சொல்.


    இரண்டுமொன்று


ஏதேனும் ஒன்றெனக்கு
இப்போதே சொல்லிவிட்டால்
பாதையினை மாற்றி
பயணிப்பேன் - வேதனையில்
எத்தனைநாள் நானிருப்பேன்
இப்படியே ? பேசாமல்
செத்துத் தொலைக்கலாம்
சே.




( மற்ற காதல் வெண்பாக்களையும் காணஇங்கே சொடுக்கவும் )

ஞாயிறு, ஏப்ரல் 01, 2012

மறதி நல்லது .





முல்லைப் பெரியாற்றில்
மூழ்கிப் போயின
பாவப்பட்ட பயணிகளை
பாதி வழியில் இறக்கிய
கட்டணம் உயர்ந்த
பேருந்துகள்


கூடங்குளத்தில்
வெடித்துச் சிதறின
இரு வேளை தேநீரை
ஒருவேளை ஆக்கிய
பால் பாக்கெட்டுகள்.


தானே புயலில் தரை மட்டமாகின
கோடிகளை விழுங்கிய
தலைமைச் செயலகமும்.
கோர்ட்டுக்குப் போன
நூலகமும்.


முப்பதாண்டு கால
தோழியின் பிரிவில்
மறந்தே போயின
அடித்த கொள்ளையும்
அனுபவித்த சிறையும்.


ஏற்றிய விலையையும்
இம்சை அரசையும்
இடைத் தேர்தல் தீர்ப்பளித்து
ஏற்றுக் கொண்டார்கள்
இனிய தமிழ் மக்கள்.


அசைக்க முடியாதினி
அம்மாவை யாரும்.


இன்னும் கூட
ஏற்றலாம் விலையை
கல்லா கட்டலாம்
கஜானா(!?) நிரப்பலாம்


மக்கள் கிளர்ந்தால்
மறக்கடிக்க
மவிவாய் கிடைக்குது
மருந்துகள் ஆயிரம்.


மாதமிருமுறை
மந்திரிசபை மாற்றலாம்.
தீய சக்தியைத்
திட்டித் தீர்க்கலாம்.
துரத்தியடித்த
தோழியோடு கூடலாம்.
இலங்கை நெருப்பில்
எண்ணெய் ஊற்றலாம்
இன்னும் கொஞ்சம்
இலவசம் தரலாம்.
குடிசையில் கொடுத்து
குடிக்கவைத்து பிடுங்கலாம்.


கொள்கைகள், கூட்டணிகள்
அமைச்சர்கள், அடிமைகள்
தொண்டர்கள் , தோழர்கள்,
அறிக்கைகள், பேச்சுகள்,
பூஜைகள், பரிகாரங்கள்,
கோடிகள் மோடிகள்,
கணிப்புகள் ,பணிக்கர்கள்,
"சோ"க்கள் , ஜோக்கர்கள்

ஆயிரம் இருந்தாலும்
அடுத்த தேர்தலுக்கு
அம்மா நம்புவது
"அம்னீசியா"வைத் தான்.


                                                  -சிவகுமாரன் 

சனி, மார்ச் 31, 2012

ஒரு கவிஞனின் நாட்குறிப்பு 5

நாவினில் நீயே தந்த நற்றமிழ் கவிதை உண்டு.
  நடக்கின்ற பாதை தோறும் ஞானவேல் ஒளியும் உண்டு.
ஆவியில் கலந்த அப்பன் அஞ்செழுத்து மந்திரம் உண்டு 
   அஞ்சாதே என்று சொல்லும் அன்னையின் சக்தி உண்டு.
கோவிந்த மாமன் பாதம் கூவி நான்  தொழுவதுண்டு 
   கோவில்கள் பலவும் சென்று கும்பிட்டு அழுவதுண்டு  
பூவினில் உறைவாள் அருள்தான் போதாத குறையும் உண்டு.
   பொன்மகள் மாமியிடம் நீ போய்ச் சொன்னால் புண்ணியம் உண்டு.

திரைகடல் மணலைப் போலே தீராத செல்வம் வேண்டும்.
  தேடிப்போய் தர்மம் செய்து, தீவினை போக்க வேண்டும். 
கரைதேடிக் களைத்துப் போகா, கடல்அலை போல நானும்  
 காலங்கள் தோறும் உந்தன் கருணையைப் பாட வேண்டும் .
இரைதேடி தேடித் தேடி எஞ்சியது ஒன்றும் இல்லை .
   எத்தனை காலம் இன்னும் ஏங்கிட வைப்பாய் அய்யா ?
நரைகூடிக் கிழடாய் ஆகி நரம்பெலாம் தளரும் முன்னே,
   நான்கொண்ட கடமை தீர்க்க நல்லருள் செய்வாய் அய்யா.
   
இரும்பென தேகம் வேண்டும் இளகிடும் இதயம் வேண்டும்
   இருக்கின்ற காலம் வரையில் இடரிலா வாழ்க்கை வேண்டும்
அரும்பிடும் மலரின் இதழாய் அணைக்கின்ற சுற்றம் வேண்டும்.
   அகிலமே எதிர்க்கும் போதும் அகலாத நட்பு வேண்டும் .
கரும்பென இனிக்கும் தமிழின் கற்கண்டு சொற்கள் வேண்டும்
  கந்தாஉனைப் பாடும் பாடல் காலத்தை வெல்ல வேண்டும்
வரும்போது மரணம் தன்னை வரவேற்கும் உள்ளம் வேண்டும்
   வையத்தில் மற்றோர் பிறவி வாராத வரமும் வேண்டும். 

-சிவகுமாரன் 


( 06 .02 .2012 பழனி பாதயாத்திரையின் போது எழுதியது.)
  

திங்கள், மார்ச் 19, 2012

உன்னை எப்படி மன்னிப்போம் ?






அய்யா அரசியல் வாதிகளே -எமை
   ஆளும் காங்கிரஸ் கபோதிகளே
பொய்யாய் இராஜப் பிச்சையன்
  போடும் வேடம் பார்த்தீரா ?
அய்யோ ! எங்கள் இனந்தன்னை
   அழிக்கும் காணொளி பார்த்தீரா ?
மெய்யாய் உமக்கு கண்ணிலையா?-உன்
   மேனியில் சிறிதும் கொதிப்பிலையா ?


போய்ப் பார்த்தாயா இலங்கைக்கு -நடந்த
  போர் பார்த்தாயா இனவெறிக்கு ?
நாய்போல் தமிழர் சுடப்பட்டு
  நாறிக் கிடந்ததை அறியாயோ ?
வாய்பே சாமல் துயர்கண்டும்
   வாளா திருக்க நீயென்ன
தாய்ப்பால் குடித்து வளர்ந்தாயா - இல்லை
   தப்பிப் பிறந்த தெருநாயா ?


திட்டம் போட்டு நம்மினத்தை
   தீர்த்துக் கட்டிய தறியீரோ ?
கட்டிப் போட்டு சுடுகின்ற
  காட்சிகள் கண்டும் பதறீரோ ?
சட்டம் உங்கள் கையிருக்க
  சதியில் உமக்கும் பங்கிருக்க
வெட்டித் தனமாய் யாமிங்கே
   வெம்பிப் புலம்பி என் செய்ய ?

இனத்தை அழித்த இலங்கைக்கு
  எதிராய் சாட்சிகள் பலவிருக்க
பிணங்கள் தின்னும் "பக்க்ஷே"க்கு
  பேரா தரவு நீ தருகின்றாய் .
கனவிலும் நுழைந்து கருவறுத்த
  "கை"களில் இரத்தக் கறையோடு
மனதினில் எந்தத் துணிவோடு
  மறுபடி வாக்குக் கேட்பாய் நீ ?

நாட்டைப் பிடித்த சனியன் நீ -உனை
  நம்பிக் கேட்டது போதுமினி
ஓட்டுக் கேட்டு மறந்தும் நீ
  ஊருக்குள்ளே நுழையாதே
போட்டு மிதிப்போம் தறிகெட்டு -உனை
  புரட்டி எடுப்போம் வெறிகொண்டு
ஆட்டிக் கொண்டினி வாராதே - நாவை
   அறுத்து எறிவோம் மறவாதே .


ஓட்டுப் பொறுக்கி நீயென்பேன்- எங்கள்
  உதிரம் குடிக்கும் பேயென்பேன்
காட்டிக்  கொடுத்த குலமென்பேன்- நீ
   காட்டு நரியின் இனமென்பேன் .
ஊட்டி வளர்த்த தாய்தன்னை -எட்டி 
   உதைக்கும்  உதவாக் கரையென்பேன்  
கூட்டிக் கொடுத்த பிறப்பென்பேன்- அந்தக்
   குணமே உந்தன் சிறப்பென்பேன்.

கொள்ளை அடித்தாய் பொறுத்திருந்தோம் -எங்கோ
   கொண்டு குவித்தாய் பார்த்திருந்தோம்
வெள்ளம் வறட்சி நிதியெல்லாம்
   உருட்டித் தின்றாய் சகித்திருந்தோம்
பிள்ளைக் குட்டியின் உயிர்குடித்த
   பேயுடன் கைகள் குலுக்குகிறாய்.
உள்ளம் நெருப்பாய் கொதிக்கிறதே -இனி
   உன்னை எப்படி மன்னிப்போம் ?



-சிவகுமாரன்