திங்கள், ஆகஸ்ட் 15, 2011

தண்ணீர் விட்டோ வளர்த்தோம் ...?

வேரிலே
இரத்தம் ஊற்றினோம்
உடல்களை
உரமாய்ப் போட்டோம்
காய்க்கவே இல்லை
இன்னும்..
கொடிமரம்.


            -சிவகுமாரன்.



சனி, ஆகஸ்ட் 06, 2011

பிணைப்பு














மரபின் வேர்களில் 
கட்டப்பட்டிருக்கிறேன் 

கால்களில் பிணைத்த 
கவிதைச் சங்கிலிகளோடும்   
காலங்களைக் கடந்து நிற்கும் 
விடைகளே இல்லா 
கேள்விகளோடும். 


இறங்கும் விழுதுகளை 
எட்டிப் பிடிக்க
விரல்கள்  விரும்பினாலும் 
விடுவதில்லை வேர்கள்.

கிளைகளில் தங்கிச் செல்லும் 
கிளிகள்
முட்டிச் செல்லும் 
மேகங்கள்
அறிந்து கொள்வதில்லை
என் ரகசியங்களை.

உதிர்ந்த சருகுகள் 
கிளியின் எச்சங்கள் 
சலசலக்கச் செய்வதில்லை 
என் சங்கிலிகளை.

வேர்களுக்கிடையே 
ஊர்ந்து செல்லும்
சிற்றெரும்புகளால்
செல்லரித்துப் போவதில்லை 
என் சங்கிலிப்  பிணைப்புகள்.

விழுதுகள் ஓர்நாள் 
வேர்களாகும்
புதிது  புதிதாய்
விழுதுகள் புறப்படும்

இன்னும் பலமாய் 
இறுகிப் போகும் 
வேர்களோடு
சங்கிலிப் பிணைப்புகள்.

அறுத்துக் கொள்ளச் சொல்லி 
வேர்களே சொன்னாலும்
விடுவாதயில்லை 
நான் 
விரும்பிக் கட்டிக் கொண்ட 
சங்கிலிகளை. 

                                                 -சிவகுமாரன்